24 ஆகஸ்ட், 2024

கேடு வெட்கக்கேடு

மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மதுரைக்கு சென்று அங்கிருந்து நெடுமாறனுடன் காரில் விருதுநகருக்குச் சென்றார் காமராஜர்.

வீட்டிற்குள் நுழைந்ததும், படுக்கையில் இருந்த காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் கண் விழித்துப் பார்த்தார். மகனைப் பார்த்ததும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டார் . அருகில் உட்கார்ந்த காமராஜர் அம்மாவிடமும், சகோதரியிடமும் விசாரித்து விட்டுக் கிளம்பினார் .

'' அப்போ... நான் வர்றேன். உடம்பை நல்லா பார்த்துக்க '' என்று கிளம்பிய போது, உலர்ந்த குரலில் சிவகாமி அம்மாள் சொன்னார், ''ஒரு வாய் சாப்பிட்டுட்டு போப்பா.''

''வேண்டாம்மா '' என்று முதலில் மறுத்தவர், ''சரி.. சரி.. சாப்பாடு எடுத்து வைங்க'' என்று கூறி, அடுக்களைக்குள் சென்று தரையில் அமர்ந்தார். 

அவருடைய சகோதரியின் மகள்கள் உணவு பரிமாறினார்கள். அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு, அம்மாவைப் பார்த்து கை கூப்பினார் காமராஜர் .

''அப்போ நான் வரட்டுமா..? ''

சொந்த வீட்டில் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தாயாரின் இறுதி காலத்தில் காமராஜர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டதாக எழுத்தாளர் சாவி எழுதியிருக்கிறார். 

''தாயாரின் மரணத்தின் போது இன்னொருவர் பணம் கொடுக்கிறார் . பல்லக்கு கட்டுகிறவர் இலவசமாக கட்டித் தருகிறார் . வந்தவர்களுக்கு ஒரு வேளை சோறு போட இடமும் இல்லை, அதற்கான பணமும் இல்லை. பத்து வருடம் இராஜாங்கம் நடத்தினான் மகன்..! பெற்ற தாய் வாழ்ந்த கதை இப்படி ! '' 
- என்று காமராஜரின் தாய் சிவகாமி அம்மாள் மறைந்த போது  கவிஞர் கண்ணதாசன் எழுதினார். 

விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த அந்த எளிய வீடு , இந்திரா காந்தியிலிருந்து லால்பகதூர் சாஸ்திரி வரை பலரும் வந்திருந்த அந்த வீடு, பிறகு அரசுடைமை ஆனது. 

"குமுதத்தில் எழுதுவதற்காக 1995ஆம்  ஆண்டில் விருதுநகரில் உள்ள காமராஜரின் வீட்டுக்கு போயிருந்தேன் . 

அருகில் இன்னொரு வாடகை வீட்டில், காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகளான கமலாதேவி வசிப்பதாகச் சொன்னதும் , அங்கு போனேன். மிகவும் எளிமையான வீடு. 

காமராஜர் மறைந்த பிறகு , பாரத ரத்னா கொடுக்கப்பட்ட போது , அதைப் பெற்று கொண்டவர்கள் நாகம்மாள் குடும்பத்தினர் தான் . 

அறுபத்து மூன்று வயதான ,
காமராஜரின் மருமகளான கமலாதேவி வறுமையில் ஒடுங்கிப் போயிருந்தார் . கணவர் இறந்துவிட , அவருடைய மகன்கள் தீப்பெட்டி ஆபிஸில் ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் . மிகக் குறைந்த வருமானம் , குடும்பத்தைத் தவிக்க வைத்திருந்தது .

'' நாங்க ஏழு பேர் இருக்கோம் . சாப்பிடவே கஷ்டமா இருக்குப்பா. கஷ்டம் தாங்காம கலெக்டர் காலில் கூட விழுந்து, அழுது கூட கேட்டுப் பார்த்துட்டேன். எந்த வேலையும் கிடைக்கலைப்பா." எதிரில் இருந்த நாகம்மாளின் குரல் ஏறி இறங்கியது. பெருமூச்சு விட்டார் .

"இப்போ பக்கத்து வீடுகளில் வேலை செய்றேன். கூட்டுறேன். இந்தா இருக்கு பாருப்பா (பக்கத்தில் இருக்கும் காமராஜரின் வீட்டைக் காட்டுகிறார்.)

"எங்க மாமா வீட்டிலே பெருக்கிற வேலையாவது கொடுக்கச் சொல்லுப்பா, உனக்கு புண்ணியமா போகும். அங்கே கூட்டினாலாவது கையில் ஐம்பதோ, நூறோ கூலியாய்க் கிடைக்குமில்லே. நான் அங்கே போய் பெருக்கினா அவமானம்னு சொல்றாங்க. நம்ம நிலைமை இப்படி இருக்கிறப்போ எங்க மாமா வீட்டைக் கூட்டிப் பெருக்கிறதில எனக்கு என்ன அவமானம் இருக்குப்பா?'' 
- என்று கசிந்து அழுதார். ஒரு முதல்வராக இருந்தவரின் மருமகள் . 

சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் .

'' மாமா இருக்கிற வரை அவருக்கும் சேர்த்துக்கல.. குடும்பத்துக்கும் சேர்த்து வைக்கல. இப்போ பாருப்பா.. விதவை பென்ஷனுக்கு மனு போடுற நிலைமையிலே இருக்கேன்.'' சொல்லும் போது கை கூப்பின காட்சி , முள்ளாய் உறுத்தியது .

அடுத்த வாரம் 1996 , மே மாதத்தில் குமுதத்தில் , '' வீட்டு வேலை செய்யும் காமராஜரின் மருமகள் '' என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளி வந்தது . வெளிவந்த மறுவாரத்தில் ஆச்சரியமான ஒரு மாற்றம்.

அன்றைய முதல்வர் ஜெயலலிதா , காமராஜரின் குடும்பத்திற்கு வீடும் , வேலை வாய்ப்பும் , வங்கியில் 11 லட்சம் ரூபாய் டெபாசிட்டும் பண்ணுவதாக அறிவிப்பு வெளியானது . 

அந்தத் தகவலைச் சொல்ல ,  மறுபடியும் விருதுநகரில் உள்ள கமலாதேவி வீட்டுக்குப் போன போது , அந்த அம்மையார் நெருங்கி வந்து கையைப் பிடித்துக் கொண்டார். கண்கள் ததும்பின. கனிந்த பார்வையில் நன்றி சொன்னார் கமலாதேவி அம்மாள்" என்று எழுத்தாளர் மணா எழுதியுள்ளார் .

இப்படியும் ஒரு மனிதர் தமிழகத்தில் முதல்வராக இருந்துள்ளார் என்பது தமிழுக்கும் , தமிழகத்துக்கும் பெருமை தான். 

மக்கள் நலனுக்காகவே கடைசி வரை தொலைநோக்கு பார்வையுடன் உழைத்த காமராஜரைத் தோற்கடித்தவரைக் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். இதைவிடக் கேவலம் வேறு என்ன இருக்க முடியும் ?

வெட்கக்கேடு. வேறு என்ன சொல்ல? 

20 மே, 2024

உறவுகள் மனித வாழ்வின் ஒரு வரம்

அண்ணா நகருக்குச் சென்று இருந்த நான் அங்கு வசிக்கும் என் நண்பர் ஒருவரின் நினைவு வர சந்திக்கலாம் என்ற ஆர்வத்தில் அவர் வீட்டுக்கு சென்றேன். மாலை நேரம். அவரோ தொலைக்காட்சியில் தோய்ந்து இருந்தார்.
என்னை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைவார் என்று எதிர் பார்த்தேன். அவரோ தொலைபேசியில் சொல்லிவிட்டு வந்திருக்கலாமே என்பது போலப் பார்த்தார். "நான் இந்த வழியாக வந்தேன், வெறுமனே எட்டிப் பார்க்க நினைத்தேன்" என்று சமாளித்துத் திரும்பினேன்.
விருந்து என்பது தமிழகத்தில் வித்தியாசமான பதம். வீட்டுக்கு வருகிறவர் அனைவரும் விருந்தினர். இன்றோ உறவினர் மட்டுமே விருந்தினர். அதிலும் நெருங்கிய சொந்தம் மட்டுமே அடங்கும். ஒன்று விட்டவர்களைக் கழற்றி விட்டுப் பல நாட்களாகிறது..
அந்த காலத்தில் அனைவரும் உறவினர்கள். ஓர் ஊரில் இருக்கும் அனைவரும் முப்பாட்டன் வகையில் சொந்தமாய் இருப்பார்கள். திண்ணையில் அமர்ந்து இருக்கும் அனைவரும் உணவு வேளையில் உண்ண அழைக்கப்படுவார்கள். பின்னர், பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் குடியேற நேர்ந்தாலும் அந்த நெருக்கம் நீடித்தது.
நகரத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் செல்லாமல் வருவது மரியாதைக் குறைவு. அவர்களும் செய்தி தெரிந்தால் கோபப் படுவார்கள். நகரத்துக்கு செல்வது அரிது. கிராமத்தில் இருந்து பண்டிகைக்கு துணி எடுக்கவும், தீபாவளி ரிலீஸ் படம் பார்க்கவும் நகரத்துக்கு வருபவர்கள் திரும்பிச் செல்ல பேருந்து இல்லாமல் உறவினர் வீட்டில் தங்குவார்கள். வருவதை முன்கூட்டி சொல்லும் வசதிகள் அன்று இல்லை.
வருகிறவர்களை எந்நேரமானாலும் வரவேற்று, வீட்டில் இருப்பதைக் கொஞ்சம் சூடாக்கி அப்பளம் பொரித்தோ, பப்படம் சுட்டோ தட்டை நிரப்பி பரிமாறுவார்கள். இதற்காகவே சாப்பாடு போட பாக்கு மட்டை நீரில் நனைக்க பரணில் இருக்கும். எப்போதுமே கொஞ்சம் கூடுதலாக சமைப்பது அன்றைய வழக்கம்.
வருகின்ற உறவினர்கள் கூடமாட ஒத்தாசை செய்வார்கள். ஒருவர்உ காய்கறி நறுக்க, இன்னொருவர் வெங்காயம் உரிக்க, வெகு சீக்கிரம் மணக்க மணக்க சாப்பாடு தயாராகும். பாத்திரம் அலம்பி வைப்பது வரை உரிமையோடு உதவுவார்கள். தன்முனைப்பில்லா உறவுமுறை அது.
இன்று சொந்த வீட்டிலேயே சொல்லாமல் போனால் சோறு கிடைக்காது. அனைத்தையும் உண்டு கழுவி கவிழ்த்து வைப்பதே மாநகரங்களில் மாபெரும் சாதனை. பழையதை உண்ண இங்கு நாய்கள் கூடத் தயாராக இல்லை.
சொல்லி வந்தாலும் உறவினர் கால் மேல் கால் போட்டு களித்திருக்கும் காலமிது. அவர்களையும் அழைத்து கொண்டு உணவகம் செல்லும் நிலை. அல்லது, வெளியில் இருந்து தருவித்த பலகாரங்கள் சம்பிரதாயத்துக்காக பரிமாறப்படும். வந்தவர்கள் அவற்றை பார்வையிலேயே உண்டு முடித்து விடுவார்கள்.
எங்கள் சின்ன வயதில் மாமா மகனோ, அத்தையோ வருவது தெரிந்தால் வீட்டுக்குள் எப்போது நுழைவார்கள் என்று வழி மேல் விழி வைத்துப் பார்த்திருப்போம். சிலரிடம் மோட்டார் சைக்கிள் இருக்கும். அந்த காலத்தில் அது அரிது. மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் அவர்தான் வந்துவிட்டாரோ என வாசலுக்கு விரைந்து வந்து பார்ப்போம்.
அதில் கதை சொல்லும் அத்தை, மாமாக்கள் உண்டு. அவர்களுடன் யார் இரவில் படுத்துக் கொள்வது என்று போட்டி போடுவோம். அவர்கள் எது பேசினாலும் அது கதையாய் தோன்றும். வீட்டினர் அவர்களோடு பேசுவதை வாயைப் பிளந்து கேட்போம். விருந்தினர் வந்தால் படிப்பதில் இருந்து விடுதலை என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி..
வருகிற உறவினர் இன்னொரு நாள் தங்க நேர்ந்தால் வீட்டில் இருக்கும் வேட்டி, புடவை அவர்களுக்கு மாற்று உடையாகப் பரிமாறப்படும். ஊரில் எந்த சொந்தக்காரர் திருமணம் என்றாலும் வந்து தங்குகிறார் உறவுகள் உண்டு.
வீட்டிலேயே பலகாரங்கள் செய்து உறவினர் வீட்டுக்கு எடுத்துச் செல்கிற கரிசனம் இருந்தது. அன்று கடையில் வாங்குவது கடைச் சரக்காகக் கருதப் பட்டது. உறவினருக்காக வீட்டில் செய்யும் விசேஷ பலகாரங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு குதூகலம் தரும்.
இன்று அக்கா, அண்ணனோடு மட்டும் உறவு முடிந்து விட்டது. அவர்களும் தங்குவதற்காக வருவதில்லை. திக் விஜயத்தோடு சரி. தங்காததற்கு காரணம் தங்கள் வீடே சொர்க்கம் என்ற நினைப்பு தான். கிடைக்கும் இடத்தில் பாயை விரித்துப் படுப்போர் இப்போது இல்லை.
இன்றைய குழந்தைகள் புதிதாக வரும் உறவினரிடம் புன்னகையோடு உபசரிப்பை முடித்து கொள்கின்றன. அருகில் சென்று ஆசையாய் பேசுவது இல்லை. அவர்களுக்குக் கதைகளை சொல்ல கணினி இருக்கிறது. கணினிக்கதைகளில் கரிசனம் இருக்குமா?
பொழுது போகாமல் அலைந்த தலைமுறை அது. இன்று மிடுக்குக் கைபேசியால் பொழுது போதாத தலைமுறை இது..
உறவு என்பது அன்று இருவழி போக்குவரத்து. எதையும் எதிர்பார்க்காமல் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு தந்தார்கள். 'அல்ல அவசர' த்துக்கு ஓடி வந்து விடுவார்கள். உடல்நலம் சரியில்லை என்றால் உடனிருந்து பணிவிடை செய்வார்கள். அன்று உறவு உரிமையாய் இருந்தது; இன்று கடமையாய் தேய்ந்தது
எனக்குத் தெரிந்து பெரியப்பா வீட்டில் தங்கிப் படித்தவர்கள் உண்டு. வசதி இன்மையால் அத்தை வீட்டில் வசித்து கல்லூரியை கடந்தவர்கள் உண்டு. அன்றும் விடுதி வசதிகள் இருந்தன.
ஆனாலும் உறவினர் வீடு கற்களால் ஆகாமல் கனிவால் ஆனதால் கதவுகள் அனைவருக்கும் அகலத் திறந்திருந்தன. அனுசரித்தும் பொறுத்துக் கொண்டும் உறவுகளோடு கூடிக் களித்த காலமது.
விதவைத் தங்கையை தங்களுடன் வைத்துக் கொண்ட அண்ணன்கள் உண்டு. இன்றோ சென்னையிலேயே இருந்தாலும் எவ்வளவு வற்புறுத்தியும் தங்க மறுக்கும் நெருங்கிய சொந்தங்கள். இன்று சொந்தத்தைவிட சுதந்திரம் முக்கியம்.
காலாண்டு தேர்வுக்கும் முழுஆண்டுத் தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நெறிக்காத விடுமுறை உண்டு.
அப்போது உறவினர் வீட்டுக்குக் குழந்தைகள் செல்வார்கள். அங்கு புதிய மனிதர்களோடு பழகி, புதியன கற்று திரும்புவார்கள்.
நான் ஐந்தாம் வகுப்பு விடுமுறையில் என் அத்தை வீட்டுக்குச் சென்று சதுரங்கம் கற்றேன், தேங்காய் எப்படி உரிப்பது என்று கற்றேன், நீச்சல் கற்றேன். இன்று எந்தக் குழந்தையும் தங்கள் வீட்டைவிட்டு வேறெங்கும் செல்வதில்லை. அவர்கள் அறையை விட்டுக் கூட அகல விரும்புவதில்லை.
அடிக்கடி சந்திக்கும் நிலையில் இருந்து எப்போதாவது சந்திக்கும் சூழலுக்கு உறவுச் சங்கிலி மாறியதால் அதில் கணுக்கள் தோறும் விரிசல்கள்.
இன்று உறவு விட்ட இடத்தை நட்பு பிடித்துக் கொண்டது. அவசரமாகப் பணம் வேண்டும் என்றால் அன்று நெருங்கிய சொந்தம் நீட்டியது கை.
இன்று ஆத்ம நண்பர்கள் தான் ஆபத்துக்கு வருகிறார்கள். அவர்களே நம்வீட்டு திருமணத்தின் போது அத்தனை இடத்திலும் நின்று சேவகம் புரிகிறார்கள். உறவு மரபு ரீதியான வரவேற்பில் முடிந்து போகிறது.
எந்த நெருக்கமும் தொடராவிட்டால் தொய்ந்து போகும். இத்தனை மாற்றங்கள் நடுத்தர குடும்பங்களில் நடந்தாலும் இல்லாதவர்களிடம் இன்னமும் உறவின் செழுமை நீடிக்கிறது.
அவலம் என்றால் அழுகிற கண்களும், கவலை என்றால் துடைக்கிற கைகளும் ஏழைகளிடம் மிச்சம் இருக்கிறது. அவர்கள் இல்லம் சிறிதாக இருந்தாலும் இதயம் பெரிதாக இருக்கிறது.
அவர்கள் நமக்கு உறவின் மேன்மையை மௌனமாய் கற்றுத் தந்து கொண்டே இருக்கிறார்கள்....


(உறவின் நேர்த்தியை இதைவிட உருக்கமாகச் சொல்ல முடியுமா?)

பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களும் பயனடைய நீங்களும் உதவலாமே. 

28 ஜனவரி, 2023

படித்ததில் மனதில் பதிந்தது

அசோக மன்னர் வந்து கொண்டிருந்தார். அவருடன் அவரது ஆலோசகர்களும் அருகில் வந்தனர். அந்தச் சமயத்தில், எதிரில் ஒரு புத்தத் துறவி வந்தார். அவரைப் பார்த்ததும், அசோகர் ஓடிப் போய் அவர் காலில் விழுந்து வணங்கினார்.

அசோக மன்னரின் தலை அந்த புத்தத் துறவியின் பாதத்தில் பட்டது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த அமைச்சருக்கு அது சங்கடமாக இருந்தது. மிகவும் வருத்தப்பட்டார். நம் அசோகச் சக்கரவர்த்தி  எப்பேர்பட்டவர், அவருடைய தலை ஒரு சன்யாசியின் பாதத்தில் படுவதா? என்று நினைத்து மிகவும் கவலைபட்டார்.

அரண்மனைக்குத் திரும்பியதும் அமைச்சர் மெதுவாக ஆரம்பித்தார்.  "அரசே எனக்கு மிகவும் வருத்தமாய் இருக்கிறது" என்றார்.

எதற்காக? என கேட்டார் மன்னர்.

"அசோகச் சக்கரவர்த்தியின் சிரம் மதிப்பு மிக்க ஒன்று . அது ஒரு சந்நியாசியின் காலில் படுவதா?" என்றார்.

அசோகர் ஏதும் பேசவில்லை. சிரித்தார். 

அதன் பிறகு, ஒரு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் அமைச்சரைக் கூப்பிட்டார். "எனக்கு மூன்று சிரங்கள் வேண்டும். அதாவது, மூன்று தலைகள் வேண்டும்" என்றார்.

"இதோ கொண்டு வருகிறேன் அரசே" என்றார் அமைச்சர்.

ஒரு ஆட்டின் தலை, ஒரு புலியின் தலை, ஒரு மனிதனின் தலை. இதுதான் அசோகர் கேட்டது. 

"எங்கே இருந்தாலும் கொண்டு வாருங்கள்" என்றார்.

அமைச்சர் புறப்பட்டார். ஆட்டுத் தலை,  புலித் தலை கிடைத்து விட்டது. அதன் பிறகு, ஒரு சுடுகாட்டுக்குப் போய் ஒரு மனித தலையும் சேகரித்துக் கொண்டு இராஜாவிடம் வந்தார்.

"அரசே உங்கள் ஆணைப்படி மூன்று சிரசுகளைக் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார்.

அசோகர் பார்த்தார். "மிகவும் நல்லது. இப்போது இது மூன்றையும் எடுத்துக் கொண்டு போய் சந்தையில் விற்றுவிட்டு வாருங்கள்" என்றார்.

அமைச்சர் அவற்றை எடுத்துக்கொண்டு சந்தைக்கு போனார். 

முதலில் ஆட்டுத் தலை விற்றாயிற்று. நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டு போனார்கள். 

அடுத்தபடியாக, புலித் தலையை ஒருவர் வாங்கிக் கொண்டார். மனித தலையை மட்டும் வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை. எல்லோரும் பார்த்துவிட்டு விலகிப் போனார்கள்.

அமைச்சர் திரும்பி வந்தார். "அரசே இந்த மனிதத் தலையை மட்டும் யாரும் வாங்க மாட்டேன் என்கிறார்கள்" என்றார்.

"சரி பரவாயில்லை. இதை இலவசமாகவே கொடுத்து விடுங்கள்" என்றார்.

அமைச்சர் மறுபடியும் சந்தைக்குப் போனார். "இலவசமாகத் தருகிறேன் இதை வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார். 

அப்போதும் யாரும் வாங்கவில்லை. 

மறுபடியும் திரும்பி வந்து, மன்னரிடம் விஷயத்தைச் சொன்னார்.

இப்போது மன்னர் சொன்னார், "அமைச்சரே, உயிர் இருக்கிற வரைக்கும்தான் இந்தத் தலைக்கு மதிப்பு. உயிர் போன பிறகு அதன் மதிப்பும் போய் விடுகிறது. ஆகையால், மதிப்பு இருக்கும் போதே பெரியவர்கள் பாதம் பணிந்து, அந்தப் புனிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

பணிவு என்பது வேறு. அடிமைத்தனம் என்பது வேறு.
பணிவது நமக்குப் பெருமை தரக்கூடிய விஷயம்தான். இருப்பினும், பணிவுக்கும் அடிமைத்தனத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். அதைப் புரிந்துகொண்டால் யார் காலில் விழ வேண்டும், யார் காலில் விழக்கூடாது, யாரைப் பணிய வேண்டும் என்பது தானாகப் புரிந்துவிடும்.

1 செப்டம்பர், 2022

ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் - சுவாரஸ்யமான கதை

ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் - சுவாரஸ்யமான கதை

நடுமண்டல கோட்டை (ஸ்ரீவில்லிபுத்தூர் குட்டதட்டியில் இருந்தது) நெல்கட்டு பாளையக்காரான பூலித்தேவன் அவர்களிடம் இருந்து கைப்பற்றிய பின்பு கும்பனி பரங்கியர்கள் சிங்கம்மாள்புரம் கிழக்கு பகுதியில் குடியேறிய இடம்தான் அவுட்டன்புரம். (தற்போது நகராட்சி ஊழியர்கள் குடியிருந்து வருகின்றனர். ) 

அங்கிருந்து தான் கும்பனியர்கள்  வரி வசூல் செய்தனர். ஆனால் சரிவர நில உடைமையாளர்கள் வரி செலுத்தாமல் இருந்ததால் மேல்வார உரிமை திருவாங்கூர் சமஸ்தானத்திடம் கொடுத்தார்கள். அப்படி தான் ஆண்டாள் கோவில் உரிமையும் சமஸ்தானத்திடம் கொடுத்தார்கள்.

1857 ஆண்டில் ஏற்பட்ட முதல் சுதந்திர போராட்டத்திற்கு பின்பு கும்பனியின் அட்டுழியங்கள் முடிவுக்கு வந்ததால் ஆங்கில அரசு நேரடியாக  இந்தியாவில் ஆட்சி அதிகாரம் செய்ய ஆரம்பித்ததால் அவர்களுடைய நீதிமன்ற நடைமுறைகள் அமுலுக்கு வந்தது. அதற்கு முன்பு நீதிமன்றங்கள் இருந்தாலும் அது மக்களின் மன்றங்களாக இருந்து மக்களின் குறைகளை நீக்க பாரம்பரிய முறைப்படி விதிப்படி நடந்தது. 

ஆனால் ஆங்கிலேயர்களின் நீதிமன்றம் ஆட்சியாளர்களை காப்பாற்றவும் மக்களை ஓடுக்கவும் ஏற்படுத்தப்பட்டது. 

இந்த நீதிமன்றத்தில் ஆண்டாள் கோவில் நிர்வாகத்தில் இருந்து திருவாங்கூர் சமஸ்தானத்தை வெளியேற்ற நான்குநேரி வானமாமலை மடம் சார்பாக வழக்கு தொடரப்பட்டு அதில் வெற்றியும் பெற்றார்கள்.

இதனால் மடம், திருபாற்கடலில் உருண்டு போய் புதைந்து போன ஆண்டாள் கோவிலின் தேருக்கு பதில் தற்போது உள்ள தேரை தயார் செய்ததாகவும் செவி வழி செய்தி உள்ளது.

சுக

#சுகவின்_கிறுக்கல்கள்

12 மார்ச், 2022

தமிழ்ப் புத்தாண்டு

 *தமிழ்ப் புத்தாண்டு*

_சிறப்புப் பார்வை_ 


*சுறவம்* 

தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?


01. மறைமலை அடிகளார் (1921)

02. தேவநேயப் பாவாணர்

03. பெருஞ்சித்திரனார்

04. பேராசிரியர் கா.நமசிவாயர்

05. இ.மு. சுப்பிரமணியனார்

06. மு.வரதராசனார்

07. இறைக்குருவனார்

08. வ. வேம்பையனார்

09. பேராசிரியர் தமிழண்ணல்

10. வெங்காலூர் குணா

11. கதிர். தமிழ்வாணனார்

12. சின்னப்பத்தமிழர்

13. கி.ஆ.பெ. விசுவநாதர்

14. திரு.வி.க

15. பாரதிதாசனார்

16. கா.சுப்பிரமணியனார்

17. ந.மு.வேங்கடசாமியார்

18. சோமசுந்தர் பாரதியார்

19. புலவர் குழுவினர் (1971)


மலையகத்தில்

01. கோ.சாரங்கபாணியார்

02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்

03. அ.பு.திருமாலனார்

04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்

05. கம்பார் கனிமொழி குப்புசாமி

06. மணி. வெள்ளையனார்

07. திருமாறன்

08. இரெ.சு.முத்தையா

09. இரா. திருமாவளவனார்

10. இர. திருச்செல்வனார்


இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து ஆரிய திணிப்பான சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் துவக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள்.


இன்று பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டு அல்ல என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும்.


1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய


இந்த அறுபதில் எது தமிழ் வார்த்தை...


யாராவது சொல்ல முடியுமா?


தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். *ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக* பிரித்து வைத்திருந்தார்கள். 


*வைகறை*

*காலை*

*நண்பகல்*

*எற்பாடு*

*மாலை*

*யாமம்*


என்று அவற்றை அழைத்தார்கள்.


அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் *அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்*. அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். *ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்*.


அதாவது *பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன*. 


தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, _தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்_.


(1 நாழிகை - 24 நிமிடங்கள்

60 நாழிகை - 1440 நிமிடங்கள்

இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்

1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்

24 மணித்தியாலங்கள் - 1 நாள்)


*பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்*.


ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, *ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்*.


1. இளவேனில் - (தை---மாசி)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)

3. கார் - (வைகாசி - ஆனி)

4. கூதிர் - (ஆடி - ஆவணி)

5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)

6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)


மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.


சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள். 


காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான். 


இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!


பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.


*தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்*.


தமிழர்கள்  நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! *இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை* இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப்  பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.


நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம்                                                  கற்பித்ததே

அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழனுக்கு

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

- *பாவேந்தர் பாரதிதாசன்*


ஆகவே, *தமிழன் என்றால்* , *தை முதல்* *நாளே தமிழ்ப் புத்தாண்டு!*

2 பிப்ரவரி, 2022

டண்ணகரம், றன்னகரம், தந்நகரம்

எழுத்துப் பிழை இல்லாமல் 

தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு  சில விளக்கங்கள்...

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? 

ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”, 

ரெண்டு சுழி “ன” மற்றும்

 "ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில் 

ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம்,

"ன" இதன் பெயர் றன்னகரம்,

"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..

நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல 'ட' இருக்கா,

அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.

ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல 'ற' இருக்கா

அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.

ஏன்னா அது "றன்னகரம்"

என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்

ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து 

வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........

அருமையான விளக்கம்  இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்தது. 

தமிழறிவோம் இதை பலபேருக்கு பகிர்வோம்.

4 ஆகஸ்ட், 2021

வே என்னும் ஒற்றைச் சொல்...

வே என்னும் ஒற்றைத் தமிழ் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.*

⚜ *தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.*

⚜ *மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.* 

⚜ *சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.*

⚜ *சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.*

⚜ *'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.*

⚜ *நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.*

⚜ *வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.*

⚜ *கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாகச் செல்வதால் வே'கம் எனப்படுகிறது.*

⚜ *உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்.*

⚜ *கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு.*

ஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மொழி என்றால் சும்மாவா? தமிழைக் கொண்டாடுவோம்.


⚜ *வாழ்க தமிழ்!*✍

31 மே, 2021

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல வரலாறும

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல வரலாறும்...

ஸ்ரீ வில்லிபுத்தூர்  பெருமைகளும்...


பெயர் காரணம்

பல நூற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடியபோது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார். வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப்போய் சிறிது நேரம் தூங்கினார். 

அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. மேலும் இந்த நகரம் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் என்று பிறந்ததின் காரணமாகவும், திருமகளைக் குறிக்கும் ‘’ஸ்ரீ’’ என்று சேர்த்து அழைக்கப்படுகிறது.


வரலாறு:

ஆண்டாள் கோயில் கி.பி. 788ல் கட்டப்பட்டது. இங்குள்ள நரசிம்மர் சன்னதி, கல்வெட்டுகளில் ஒன்றான, சோழனின் தலைகொண்ட வீரபாண்டியன் (கி.பி.946 -966 ) கல்வெட்டில், இக்கோயில் 'ஜலசயநாட்டுக் கிடந்தருளின பரமசுவாமி கோயில்' என்றழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

சோழமன்னன் முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070 -1120 ) ஆட்சியில் இந்த ஊர், 'விக்கிரமசோழ சதுர்வேதிமங்கலம்' என்றழைக்கப்பட்டது. பிற்கால பாண்டியர் கல்வெட்டில், இக்கோயில் வடபெருங்கோயில் பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயிலாக இருந்தது. பின், கி.பி.13 ம் நூற்றாண்டில் இந்த ஊர், 'பிரம்மதேய குலசேகர சதுர்வேதி மங்கலம்' என்ற பெரிய நகரமாக பிற்கால பாண்டியர்களால் விரிவுபடுத்தப்பட்டது. 

திருமலைநாயக்கர் (1623-1659) மற்றும் இராணி மங்கம்மாள் (1689-1706) ஆட்சி காலத்தில், இந்த நகரம் மிகவும் பிரபலமானது. 1751 முதல் 1756 கி.பி. இருந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நெற்கட்டும்செவல் பாளையக்காரர் பூலித் தேவர் ஆட்சியின் கீழ் வந்து ஒரு மறவர் பாளையமாக இருந்தது. பின் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைபெரியசாமி தேவர் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டது. அடுத்து, முகமது யூசுப் கான் கைகளில் விழுந்தது. 1850 வரை, ஆண்டாள் கோவில் திருவிதாங்கூர் ராஜா சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடையும் வரை பிரிட்டிஷ் நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது.( மதுரையைக் கைப்பற்றிய கான்சாகிப் என்ற மருதநாயகம்,

ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த 'நெற்கட்டுச் செவ்வல்' பாளையக்காரர் பூலித்தேவரை வெல்ல, ஸ்ரீவில்லிபுத்தூரில் முகாமிட்டார். 

1756 மே 6 -ல் நடந்த போரில் அவரை வெல்ல இயலாமல், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றினார். பின், அதை தரைமட்டமாக்கினார். இப்போது எந்தத் தடயமும் இல்லாத அந்த இடம் 'கோட்டைத்தலைவாசல்' என்றழைக்கப்படுகிறது. (அந்த இடம் முழுவதும் இப்போது வீடுகளாகி, கோட்டைத்தலைவாசல் தெருவாக மாறிவிட்டது.)

மதுரைக்கும் நெல்லைக்கும் நடுவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டை இருந்ததால், ஆங்கிலேயர் ஆட்சியில் 'நடுமண்டலம்' என்றழைக்கப்பட்டது. ஆங்கிலேயரின் ராணுவ தளவாடமாகவும் இருந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் முன்பு மதுரை மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. 1838-இல் திருநெல்வேலி மாவட்டத்தில் இணைக்கப்பட்டு இருந்தது. 1910-இல் ராமநாதபுரத்தில் இணைக்கப்பட்டு . பின்பு ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது முதல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.


சூடி கொடுத்த சுடர்க்கொடி.

ஆண்டாள் வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.

ஒரு குழந்தையாக, ஆண்டாள், துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். 

இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக்கருதி வளர்த்து வரலானார். அவர் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை.

சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார்.

இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்து கொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார்.

அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.

கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காகச் செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். 

என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள்.

திருப்பதி பிரம்மோச்சவத்திற்கு ஆண்டாள் சூடி கொடுத்த மலர் மாலை அணிவிக்கப்படுகிறது.

ஆண்டாள் திருத்தேர் மற்றும் ஆடிப்பூர தேரோட்டம்.

தமிழகத்திலேயே திருவாரூர் தேரை அடுத்து, இரண்டாவது பெரிய தேர் இக்கோயிலுக்குச் சொந்தமானது என்ற விவரம் நிச்சயம் ஆச்சரியத்தைத் தரும்.

இத்தேர் பல நூறு ஆண்டுகளுக்கு முன், நாங்குநேரி மடம் பரமஹம்ச பட்டர் பிரான் ராமானுஜ ஜீயர் சுவாமிகளால் உபயமாக வழங்கப்பட்டது. தேர் முழுவதும் தேக்கு, கோங்கு போன்ற உயர்ரக மரங்களால் செய்யப்பட்டது என்பதால் இன்றளவும் உறுதியாக இருக்கிறது. 

இதன் விசேஷம் என்னவென்றால், ராமாயண, மகாபாரத கதைகளைக் குறிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. சுமார் 1,500 டன் எடையும், 112 அடி உயரமும் கொண்ட இத்தேரின் சக்கரம் முன்பு மரத்தால் செய்யப்பட்டு இருந்தது. தேரோட்ட உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கோபுரமும் திருத்தேரும் கம்பீரமாக காட்சியளிக்கும். பத்து கி.மீ தொலைவிலும் தேர் எந்த ரதவீதியில் உள்ளது என அறியலாம். 

காலபோக்கில் மர சக்கரங்கள் சேதமுற்றதால் அதிக செலவு கருதி 18 ஆண்டுகள் ஓடாதிருந்தது. முன்பு வலிமை வாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி நிலைக்கு வர மூன்று மாதங்கள் ஆகும். தற்பொழுது இரும்பு சக்கரம் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டது. தற்போது தேரோட்ட உற்சவம் அரை நாளில் நடந்து முடிந்து விடுகிறது.

தமிழக அரசின் சின்னம் 

ஆண்டாள் கோவில் கோபுரம் .

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரை ஒன்றை வடிவமைக்கத் திட்டமிட்டனர். பலரும் பல்வேறு யோசனைகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். 

ரசிகமணி டி.கே.சி. அவர்களிடம் ஓமந்தூரார் யோசனை கேட்டார். “இதற்கா இவ்வளவு யோசனை? தமிழ்நாடு முழுவதும் வானளாவிய கோபுரங்கள் எழுந்து நிற்கின்றனவே. அதைவிடவா தமிழ்க் கலையையும், தமிழ்ப் பண்பாட்டையும் எடுத்துக் காட்டும் சின்னம் வேறு இருக்கிறது? நம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் மிகவும் அழகான தோற்றத்துடன் இருக்கிறது. அதையே தமிழக அரசின் சின்னமாக வைத்து விடலாமே” என்று உடனே பதில் சொல்லிவிட்டார் ரசிகமணி. டி.கே.சி. அவர்களின் இந்த அரிய யோசனை ஏற்கப்பட்டு தமிழ்நாட்டின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூரின் கோபுரம் இடம் பெற்றுவிட்டது. 

தமிழக அரசு முத்திரையில் இடம்பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரத்தை முதன் முதலில் தமிழக அரசு சின்னமாக அறிவித்தவர் திரு. பி.எஸ். குமாரசுவாமி ராஜா ஆவார். தற்போதைய தமிழக அரசு சின்னம் திரு. காமராஜரால் 1956இல் அறிமுகப் பட்டது அப்போது மதராஸ் மாகாணம் என்ற பெயரே இருந்தது. பிறகு 1968இல் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட போதும் இந்தச் சின்னமே நீடித்தது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் தனித்தன்மை கொண்டது; அகலம் குறுகியிருப்பதால் பதினொரு நிலைகள் கொண்ட அதன் உயரம் ஒருவித பிரம்மாண்ட தோற்றத்தை அளிக்கிறது. உலகப் பன்னாட்டு நிறுவனம் புராதன சின்னமாக இக்கோபுரத்தை அறிவித்துள்ளது.


பால்கோவா:

ஆண்டாள் கோயிலில் இன்றும் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டுச் சடங்கின் அடிப்படையில் பால்கோவாவின் வரலாற்றை உத்தேசமாக அறிய முடிகிறது. அதாவது ஆண்டாள் திருமணம் ஆன பிறகு, பிறந்த வீட்டுக்குச் செல்லும் ஒரு சடங்கின்போது சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பாலை ஆண்டாளுக்குப் படைக்கிறார்கள். பால்கோவா தயாரிக்கும் முறையுடன் ஓரளவு ஒத்துப்போவதால் இந்த வழிபாட்டு மரபில் இருந்து பால்கோவாவின் வரலாறு பல நூற்றாண்டுப் பழமையானது எனலாம். இந்தப் பின்புலமும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால் வளமும் பால்கோவோ தோன்றலுக்கான காரணமாக இருந்திருக்கலாம். 

ஒரு கேன் பால் என்பது பத்து லிட்டர், இதில் ஒன்றேகால் கிலோ ஜீனியை போட்டு மெதுவாகக் கலக்குகிறார்கள். இதைச் செய்ய கேஸ் அடுப்பு பயன்படுத்துவதில்லை, இன்றும் முந்திரி குப்பைகளை வைத்து எரிக்கிறார்கள். அதுவும் இந்த சுவைக்கு ஒரு காரணம் போலும்! மெதுவாக அந்தப் பாலைக் கிண்ட கிண்ட அது சுண்டி வருகிறது

இதைச் செய்ய கடின உழைப்புதான் ஆதாரம் என்றாலும் மக்கள் அதை ஒரு கலையின் வெளிப்பாடாகவே பார்க்கிறார்கள். இந்த உழைப்பாளிகளின் கடின உழைப்புதான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு உலக அரங்கில் தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.


ஸ்ரீவில்லிபுத்தூரின் தனி சிறப்புக்கள்.

கோதை பிறந்த ஊர், கோவிந்தனை (மகாவிஷ்ணு) வாழும் ஊர், தமிழ்நாடு அரசாங்கத்தின் சின்னமாம் கோபுரம் இருக்கும் ஊரும் இதுதான்.

கர்மவீரர் காமராஜர் சட்டமன்ற உறுப்பினராக ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று ஜெயித்துத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார்.

இந்தியாவிலேயே பனை ஆராய்ச்சி நிலையம் இருக்கும் ஒரே ஊரும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்தான்.

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் (தசாவதாரம்) மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் உருவானதும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.

மகாவிஷ்ணுவை வழிபடுவதில் சிறந்த பக்தர்களாக இருப்பவர்கள் ஆழ்வார்கள். அந்த ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள் எனப்படும் நாச்சியாரம்மன் என இரண்டு ஆழ்வார்கள் பிறந்த ஒரே புண்ணியஸ்தலமும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்தான்

திருப்பாவை என்னும் வைஷ்ணவ பாடல் தொகுப்பு பிறந்ததும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில்தான்.

தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் நூலகம் பென்னிங்டன் பொது நூலகம் இருப்பதும் இங்கேதான்.

புதுவைத்தலம் என்ற பழைய பெயர் இந்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உண்டு. இந்த புதுவைத்தலம் என்ற பெயர் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரின் தெற்கு எல்லையில் அமைந்திருக்கும் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவிலின் பெயரே ஆகும். சுமார் 1400களில் கட்டப்பட்ட திருக்கோவிலான இந்த சிவாலயம்தான் விருதுநகர் மாவட்டத்திலேயே இருக்கும் ஒரே ஒரு பழமையான சைவ திருக்கோவில் ஆகும்.

உலகத்திலேயே சாம்பல் நிற அணில் சரணாலயம் இருப்பதும் ஸ்ரீவில்லிபுத்தூரின் வனப்பகுதியான செண்பகத்தோப்பில்தான்.

ஏலே நீ யாருல கோமாளி... இது எம் மக்கள் பாசத்தோடும் நேசத்தோடும் பழகும் விதம். 



#

12 மே, 2021

திருஉத்திரகோசமங்கை கோவில் சிறப்புகள்

திருச்சிற்றம்பலம்


திருஉத்திரகோசமங்கை கோவில் சிறப்புகள்


🌳இக் கோவில் தான் உலகின் முதல் சிவன் கோவில். 8000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது.

🍀இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் பூத்துக் குலுங்குகிறது.

🍏இங்கு தான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்குச் சாட்சியாகக் கல்வெட்டுகள் உள்ளன.

🟢சிவனின் சொந்த ஊர். உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர். உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில்.

♻️நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோவில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம்.

🍃தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவான இடம்.

☘️மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம்.

இப்படி பல அதிசயங்களும், ஆச்சர்யங்களையும், அற்புதங்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை அருள்மிகு மங்களநாதர் ,மங்களநாயகி திருக்கோவில்.

🌲திருஉத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இக் கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

🌿இத் தலத்தில் உள்ள உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.

🌴திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்' இத் தலத்தில் தான் நடந்தது. இக் கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, அவர்களது தலைநகராகச் சிறிது காலத்துக்கு திருஉத்திரகோசமங்கை இருந்தது.

🌱ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம், தெட்சிண கைலாயம், சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப்பள்ளி, பத்ரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.

🌵மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்.

🎄இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.

🦚மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.

🥦இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே, இத்தலம் ராமாயண காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்தக் கல்வெட்டு கருதப்படுகிறது.

🥬இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரி நாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.

🌿இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர்.

இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப் படைப்பாக உள்ளார். கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.

🌳இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.

🟢மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சி தந்த சிறப்புடைய தலம். இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.

🟩இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூஜிப்பதாக ஐதீகம். சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாப விமோசனம் செய்து அம்பாளை மணந்து கொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

📗உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக் கூட பந்தை நகர்த்த முடியும். 

இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல் நீரில் வாழும் மீன்களாகும்.

♻️பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர். இந்தக் கோவிலில் சிவனுக்கும், அம்பாளுக்கு தாழம்பூ மாலை கட்டிப் போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.

🌳இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகு காலத்தில் பூஜை தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள், திருமணத்தடை போன்றவை விலகுகின்றன.

🍀இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி, சகஸ்ரலிங்க சன்னதி நான்கும் தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

🌲நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால் இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.

🌿மங்கள நாதருக்குத் தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

☘️மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.

🌴மங்கள நாதர் சன்னதியைச் சுற்றி வரும்போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம். இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.

🌵உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. 

இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது. 

நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர் தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.

🍃அம்பிகைக்குப் பிரணவப் பொருள் உபதேசித்த இடம். இங்குள்ள மங்கள நாதர் லிங்க வடிவில் உள்ளார்.

🥦தலவிருட்சமான இலந்த மரம் மிகமிகத் தொன்மையானதும், இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும் முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.

🌱ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா.

🐍இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன.

🦚சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.

🥬ஈசன், ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒருமுறை பக்தர்கள் வந்து சென்றால் சொர்க்கம் செல்லுவது நிச்சயமாகும்.

🙏🏻💚ௐ நமசிவாய💚🙏🏻

🙏🏻💝#அன்பே #சிவம்💝🙏🏻

திருச்சிற்றம்பலம்

அவனருளாலே எல்லாம் சிவன் செயல் சர்வத்தையும் படைத்த சிற்றம்பல நாதனே!

சர்வத்திலும் நிறைந்தாய், சர்வமும் விழைந்தே;

அர்ப்பணிக்கு முள்ளத்தில், அரியாசனம் கொண்டே முற்பிறவி வினையறுக்கு, முடிவிலா சோதியனே

**திருச்சிற்றம்பலம்**

🙌🏾அவனருளாலே👐🏻

🙏🏻🙏🏻

சிவமே தவம்.....

தவமே சிவம்.....

திருச்சிற்றம்பலம்

முப்பொழுதும்... *நற்றுணையாவது நமசிவாயவே*

15 பிப்ரவரி, 2021

மகாத்மா நம் ஆத்மா

மனிதம் வாழ மனிதா கற்றுக்கொள்! 

மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.

எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன். 

காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான்.

அடிக்கும்போது எல்லோரும் ஐயோ!என்று அலறினார்கள்.

ஆனால், காந்தி மட்டும் "ராம! ராம்!!" என்று சொன்னார். அது. அவனை மிகவே யோசிக்க வைத்தது.

அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான். ஆனால், காந்தியை அவ்வப்போது உற்றுப் பார்த்தான். இலேசாகப் புன்முறுவல் காட்டினான். 

ஒரு நாள் "மிஸ்டர் காந்தி" என்று கனிவாக அழைத்து, நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன்; என்ன வேண்டும் என்றான்?

ஏதாவது புத்தகம் கொடுங்கள்  என்றார் காந்தி. 

அவன் "பைபிள்" சார்ந்த இரு நூல்களைப் பரிசாகக் கொடுத்தான். 

இந்தத் தொடக்கம் நட்பாக மாறியது; வளர்ந்தது. 

ஒரு நாள் காந்தியிடம் வந்த ஸ்மட்ஸ், "நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும், ஒரு வருத்தமான செய்தியையும் கொண்டு வந்துள்ளேன்" என்றான்.

மகழ்ச்சி  எது? வருத்தம் எது? என்று கேட்டார் காந்தி.

"இன்று உங்களுக்கு விடுதலை. இது மகிழ்ச்சியான செய்தி. ஆனால், உங்களைப் பிரிய என்னால் முடியவில்லை. இது வருத்தமான செய்தி" என்றான் ஸ்மட்ஸ்.

"நானும் உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன்; என் நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிய காந்தி, சிறையில் தைத்த பூட்ஸ் ஒன்றை அவரிடம்  கொடுத்தார். 

ஆவலோடு அணிந்து பார்த்த ஸ்மட்ஸ், 

"இவ்வளவு துல்லிமாகத் தைக்க, என் கால்களின் அளவு எப்படிக் கிடைத்தது" என்று கேட்டான்.

காந்தி சிரித்தபடியே, தனது மார்புத் துண்டை அகற்றி காட்டினார். 

ஆரம்ப காலத்தில் ஸ்மட்ஸ் தம் காலால் உதைத்தபோது ஏற்பட்ட வடுக்கள் அங்கு இருந்தன.

"இந்த வடுக்களை அளந்துதான் தைத்தேன்" என்று காந்தி சொன்னார்.

"தடால்" என்று சத்தம். 

ஸ்மட்ஸ் கீழே விழுந்து காந்தியின் கால்களைப் பிடித்துக் கதறினான்.

"நான் மிருகம்! கொடிய, மிகக் கேவலமான மிருகம்!! என்னை மன்னித்து விடுங்கள். இனி யாரையும் அடிக்க மாட்டேன்" என்றான். 

ஒரு நிமிடத்தில், ஒரு கொடிய மிருகம், மென்மையான மனிதனாக மாறினான்.

"கல்லையும் கனியாக மாற்றலாம்" என்று  இதைத்தான் சொன்னார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

உடனே ஸ்மட்ஸ், "இந்த பூட்ஸ்தான் இனி எனக்குக் கடவுள்; இதை மட்டுமே வணங்குவேன். இதை அணிய மாட்டேன்" என்று சொல்லி அந்த பூட்சை தன் பூஜை அறையில் வைத்து வணங்கினான்.

*நாம் நினைத்தால், யாரையும் மன்னிக்கவும் முடியும். மாற்றவும் முடியும்.*

மன்னிக்கின்ற மனம் தான் மனிதனை மகாத்மாவாக மாற்றும்.

மனிதன் மகிழ்வுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்திட மாமனிதமே மிகச்சிறந்த பண்பு.


🌎

2 ஜனவரி, 2021

எம் பைந்தமிழ் நாடு வாழிய வாழியவே

எம் பைந்தமிழ் நாடு வாழிய வாழியவே!

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு, நம் தமிழ் திரு நாடுதான். இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன? 

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. லண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066இல் நிறுவப்பட்டது.

தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். 

ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதேபோல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், ஜவுளி வகைகள், கைவினைப் பொருள்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.

உலகிலேயே ஒரே சீராக 80 லட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக்கொள்ள பயன்படுத்தினர்.

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.

பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 

ஏன் கோயில்கள் கட்டினார்கள்?

தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம்?

தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள், அவரவர்கள் ஆண்டபோது ஏன் மருத்துவமனை கட்டவில்லை?, கல்விச்சாலை அமைக்கவில்லை? ஆனால் கோயில்களைக் கட்டினார்கள்.

கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன?

மக்களுக்குப் பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான்?

உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ?

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆகும் செலவு என வரவு செலவை வைத்து தன்னிறைவுத் திட்டத்தை அடைய நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.

இதை எண்ணியேதான் தமிழக கோயில்கள் எழுப்பப்பட்டன.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என இதை வைத்துதான் சொல்லினார்கள் போலும்.

மன்னர்கள் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரைச் சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருள்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்குக் கொண்டு செல்லும் போக்குவரத்து, வண்ணம் தீட்டும் ஓவியக் கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

கோவிலுக்கு மானியமாகக் கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன்மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பண்டமாற்று முறையில், தன்னிறைவு பெற்றது பொருளாதாரம். 

கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதைக் கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்தக் கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருள்கள்.

நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்யும் மண்பானை செய்வோர், மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.

நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்குத் தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனத்திற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 

தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம். அந்த வஸ்திரங்களைச் சுத்தம் செய்ய ஒரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோயிலைச் சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், அதுவும் வருட வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

இவர்கள் அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்க, அதன்மூலம் வாழ்வாதாரம் பெறுகவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டிய வாழ்வாதாரம்.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்தக் கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளைபொருள்களின் விதை பொருள்கள்.

12 வருடத்திற்கு ஒருமுறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவரவருக்குத் தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்குக் கட்டமைக்கப்பட்டதே, நம் கோயில்கள்.

ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம். 

அந்தந்த ஊரைச் சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 

இப்படி அமைக்கப்பட்டதுதான் நம் நாட்டின், வீட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு.

மாதச் சம்பளம் பணமாக, பணத்திற்குப் பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்தத் தெய்வங்கள், அங்கே வாழ்வதாகவும், அந்தக் கோயிலின் சொத்துக்கள், அந்தத் தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

உயிருள்ள ஒருவர், எப்படித் தினமும் குளிப்பாரோ, உடை உடுத்திக் கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.

நிலங்கள் கோவிலுக்குச் சொந்தம், கோவிலுக்கு வருடத்திற்கு நெல் முதல் தேங்காய் மற்றும் எண்ணை திரிநூல் கொடுத்துவிட்டு நிலத்தில் வேளாண்மை செய்துகொள்ளலாம், ஆறு கால்வாய்கள் குளம் ஏரி அணை என்பதை அரசு பார்த்துக்கொள்ளும், சோழன் வெட்டிய கால்வாய்களின் நீளம் உலகத்தின் சுற்றளவை விடப் பெரியது எனக் கூறப்படுகிறது,

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது.

உலகமெங்கும் நிலபிரபுத்துவ பொருளாதாரமாக இருந்தபோது இங்கே கோவில் பொருளாதாரமும் குடவோலை முறையும் இருந்தது,

வாழிய எம் பைந்தமிழ் நாடு வாழிய வாழியவே. 

17 ஆகஸ்ட், 2020

கவிப்பேரரசு காலக் கவிதை

 #அந்தந்த_வயதில்


#இருபதுகளில்


எழு!

உன் கால்களுக்கு

சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!

ஜன்னல்களைத் திறந்து வை!

படி! எதையும் படி!

வாத்சாயனம் கூடக்

காமமல்ல, கல்விதான்...

படி!

பிறகு

புத்தகங்களை எல்லாம்

உன்

பிருஷ்டங்களுக்குப்

பின்னால் எறிந்துவிட்டு

வாழ்க்கைக்கு வா...


உன் சட்டைப் பொத்தான்,

கடிகாரம்,

காதல்,

சிற்றுண்டி,

சிற்றின்பம்

எல்லாம்

விஞ்ஞானத்தின் மடியில்

விழுந்து விட்டால்,

எந்திர அறிவு கொள்!

ஏவாத ஏவுகணையினும்

அடிக்கப்பட்ட ஆணியே பலம்.

மனித முகங்களை

மனசுக்குள் பதிவு செய்!

சப்தங்கள் படி!

சூழ்ச்சிகள் அறி!

பூமியில் நின்று

வானத்தைப் பார்!

வானத்தில் நின்று

பூமியைப் பார்!

உன் திசையைத் தெரிவு செய்!

நுரைக்க நுரைக்க காதலி!

காதலைச் சுகி!

காதலில் அழு!

இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்

மணம் புரி!

பூமியில் மனிதன்

இதுவரை துய்த்த இன்பம்

கையளவுதான்...


மிச்சமெல்லாம் உனக்கு!

வாழ்க்கையென்பது

உழைப்பும் துய்ப்புமென்று உணர்!

உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!

இன்னும்... இன்னும்...

சூரியக் கதிர்கள்

விழமுடியாத ஆழத்தில்...


#முப்பதுகளில்


சுறுசுறுப்பில்

தேனீயாயிரு!

நிதானத்தில்

ஞானியாயிரு!

உறங்குதல் சுருக்கு!

உழை!

நித்தம் கலவி கொள்!

உட்கார முடியாத ஒருவன்

உன் நாற்காலியை

ஒளித்து வைத்திருப்பான்...

கைப்பற்று!


ஆயுதம் தயாரி...

பயன்படுத்தாதே.

எதிரிகளைப் பேசவிடு!

சிறுநீர் கழிக்கையில் சிரி!

வேர்களை,

இடிபிளக்காத

ஆழத்துக்கு அனுப்பு..

கிளைகளை,

சூரியனுக்கு

நிழல் கொடுக்கும்

உயரத்தில் பரப்பு..

நிலை கொள்.


#நாற்பதுகளில்


இனிமேல்தான்

வாழ்க்கை ஆரம்பம்..

செல்வத்தில் பாதியை

அறிவில் முழுமையை

செலவழி...


எதிரிகளை ஒழி!

ஆயுதங்களை

மண்டையோடுகளில் தீட்டு!

ஒருவனைப் புதைக்க

இன்னொருவனைக்

குழிவெட்டச் சொல்!

அதில்

இருகையால் ஈட்டு..

ஒரு கையாலேனும் கொடு...

பகல் தூக்கம் போடு.

கவனம்!

இன்னொரு காதல் வரும்!

புன்னகைவரை போ...

புடவை தொடாதே.

இதுவரை இலட்சியம் தானே

உனக்கு இலக்கு!

இனிமேல்

இலட்சியத்துக்கு நீதான்

இலக்கு...


#ஐம்பதுகளில்


வாழ்க்கை, வழுக்கை

இரண்டையும் ரசி..

கொழுப்பைக் குறை..

முட்டையின் வெண்கரு

காய்கறி கீரைகொள்!

கணக்குப்பார்!

நீ மனிதனா என்று

வாழ்க்கையைக் கேள்...

இலட்சியத்தைத் தொடு

வெற்றியில் மகிழாதே!

விழா எடுக்காதே!


#அறுபதுகளில்


இதுவரை

வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..

இனியேனும்

வாழ்க்கையை நீ வாழ்...


விதிக்கப்பட்ட வாழ்க்கையை

விலக்கிவிடு...


மனிதர்கள் போதும்.

முயல் வளர்த்துப் பார்!

நாயோடு தூங்கு!

கிளியோடு பேசு!

மனைவிக்குப் பேன் பார்!

பழைய டைரி எடு

இப்போதாவது உண்மை எழுது..


#எழுபதுக்கு_மேல்


இந்தியாவில்

இது உபரி...

சுடுகாடுவரை

நடந்து போகச்

சக்தி இருக்கும்போதே

செத்துப்போ...

ஜன கண மண...


- கவிப்பேரரசு -

3 ஜூலை, 2020

தேவதை என் மகள்

என் மகள் மீனாட்சிக்கு ஐந்து வயதானது. என் ஒரே மகள். அவள் பிறந்தநாளுக்காக என் நண்பன் கேசவனிடன் வாங்கிய கடனில்,  
200 ரூபாய் ஃபிராக், 20 ரூபாய் கேக், 10 ரூபாய் சாக்லேட், 20 ரூபாய் பொம்மை மட்டும் வாங்க முடிந்தது.

வீட்டிற்கு வந்தபோது அவள் தோழி பொன்னியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். 

நான் வீட்டிற்குள் நுழைந்ததும்,

''ஐ... அப்பா '' என்று ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டாள். 

அவளிடம் உடை மற்றும் பொம்மையைக் கொடுத்தேன்.

''புடிச்சிருக்கா..., மீனு'' என்றேன்.

''எனக்கு இந்தப் பொம்மை வேண்டாம்பா.''

''ஏன் வேண்டாம் மீனு. இது நல்லா  இல்லையா ''

''இதைக் கடையில திருப்பி கொடுத்துட்டு, பொன்னி போட்டிருக்காலே அதே மாதிரி  ஜல் ஜல் கொலுசு வாங்கிட்டு வாங்கப்பா. ''

''அது வேண்டாம் மீனு. கால்ல குத்தி  புண்ணு வந்துடும். இந்தப் பொம்மை அழகா இருக்கு பாரு. பாப்பா மாதிரி வச்சு விளையாடு. ''

''எனக்கு அதுதான் வேணும்'' என்று அழத் தொடங்கினாள்.

 ''நாளைக்கு வாங்கிட்டு வரேன் செல்லம். ''

'' இன்னைக்கே கொலுசு வேணும்'' என்று கத்தி அழுதாள்.

''எதுக்கு அவளைப் பிறந்தநாள் அதுவுமா அழ வச்சுட்டு இருக்கீங்க ''  மனைவியின் குரல்.

''சரிமா, வாங்கிட்டு வரேன்'' என்று வெளியே கிளம்பினேன்.

அப்போதும் என்னிடம் சரியாக 30 ரூபாய் தான் இருந்தது. 

வெள்ளிக் கொலுசின் விலை கேட்டேன், 2000 என்றார்கள். வெள்ளி அல்லாத போலி கொலுசு கூட 100 ரூபாய்க்குமேல் சொன்னார்கள்.  

கடைவீதியில் மண் உண்டியல் 30 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு வீடு வந்தேன். 

மீனு தூங்கி இருந்தாள் .

விடிந்ததும் ''ஜல் ஜல் கொலுசு வேணும்பா '' என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள்.

''நான் ஒரு மேஜிக் பொருள் வாங்கிட்டு வந்திருக்கேன். அதை வச்சு நாம என்ன வேணாலும் வாங்கலாம். தெரியுமா ?'' 

''என்ன மேஜிக் பா... ''

''இங்க பாரு உண்டியல் ''

''இதுல இருந்து கொலுசு வருமா ''

''ஆமா மீனு. இதை சாமி பக்கத்துல வச்சிடனும். தினசரி உள்ளே காசு போடணும்.  நிறைந்ததும் இதை உடைத்தால் நிறைய காசு கிடைக்கும்.  நமக்கு என்ன வேணுமோ வாங்கிக்கலாம்.''

எங்கள் கம்பெனியில் மாலை 4 மணி ஆனதும், கேசவன் டீ குடிக்கக் கூப்பிடுவான். அவன் சிகரெட் பிடித்து விட்டு டீ  குடிப்பான். நானும் டீ குடித்துவிட்டு 10 ருபாய் கொடுத்துவிடுவேன்.  

உண்டியல் வாங்கிய மறுநாள் என்னைக் கூப்பிட்டான்.

''அருண், டீ குடிக்கப் போகலாம் வா...''

'' இல்ல கேசவன். டீ குடிக்கறதை நிறுத்த போறேன். அடிக்கடி தலை சுத்தற மாதிரி இருக்கு.'' 

''சரிப்பா, விட்டுடு . அதுவும் நல்லது தான்.''

டீ குடிக்காமல் வைத்திருந்த காசை வீட்டுக்கு வந்து மீனுவின் கையால் உண்டியலில் போடச் செய்வேன். 

அந்த சில்லரைகள் 'க்ளிங்' என்ற சத்தத்துடன் விழுவதைக் கேட்டு சிரிப்பாள்.

இது தினமும் நடந்தது. நாட்கள் கடந்தன. 

கேசவன் வேறு கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுவிட்டான். 

நான் டீ குடிக்காமல் சேமித்த காசுகள் உண்டியலில் நிறைந்தன. மீனு உண்டியலைக் குலுக்கி அந்தச் சத்தத்தைக் கேட்டு ரசிப்பாள் . 

''இந்தச் சத்தம் கூட ஜல் ஜல் கொலுசு சத்தம் மாதிரியே கேக்குதுப்பா.  பொன்னி போட்டு நடக்கற மாதிரி எனக்கும் வாங்கிக் கொடுங்கப்பா.''

''உண்டியல் நிறையட்டும் மீனு. நாம் காசை எடுத்துட்டு போய் வாங்கிக்கலாம். ''

அது தோராயமாக 2000 ரூபாய் வந்திருக்கும் என்று ஒரு நாள்  தோன்றியது.

''மீனு உண்டியலை உடைச்சு எண்ணி பாக்கலாமா.''

''ஐ... ஜாலி, ஜல் ஜல் கொலுசு வாங்கப் போறேனே... ''

உடைத்து எண்ணினேன். 2030 ருபாய் இருந்தது. 

நானும் மீனுவும் கிளம்பினோம். 2000 சில்லரையை, ஒரு மாளிகைக் கடையில் கொடுத்து 2000 ரூபாய் நோட்டாக மாற்றிக்கொண்டோம்.

 ''அப்பா இந்த ஒரே ஒரு பிங்க் கலர் பேப்பர் காசு கொடுத்தா, ஜல் ஜல் கொலுசு கொடுப்பங்களா...''

''ஆமாம் மீனு ''

''இதை நானே, பத்திரமா வச்சுகிறேன். கடையில் இருக்கிற அங்கிள் கிட்ட நானே கொடுக்கறேன்.''

''சரி செல்லம், பத்திரமா வச்சுக்கோ.''

தன் ஸ்கர்ட் பாக்கெட் உள்ளே வைத்துக்கொண்டாள்.

பேருந்து நிறுத்தம் சென்று காத்திருந்தோம். 

எங்களைக் கடந்து சென்ற ஆட்டோவில், தெரிந்த முகம். கேசவன்.

சிறிது தூரம் சென்ற ஆட்டோ அங்கேயே நின்றது. நான் மீனுவை அழைத்துக்கொண்டு ஆட்டோக்கு அருகில் சென்றேன்.

கேசவன் இறங்கினான்.

''கேசவா, புது வேலைக்குப் போனதும் மறந்துட்டியே. போன் பண்ணறதுக்குக் கூட நேரம் இல்ல உனக்கு. நான் ஒரு நாள் பண்ணேன். அப்பவும் எடுக்கல நீ... ''

''இல்ல அருண். போன் பண்ணனும் தான் நினைப்பேன். அந்த நேரம் வேற ஏதாவது வேலை வந்துடும். அப்புறம் பேசிக்கலாம்னு விட்டுடுவேன். மீனு குட்டி நல்லா இருக்கியா... ''

''நல்லா இருக்கேன் அங்கிள் ''

''ஆட்டோல யாரு. ஹரிணியா. எப்படி இருக்க ஹரிணி.''

''நல்லா இருக்கேன் அங்கிள் ''

''மீனு ஹரிணி அக்காக்கு ஹாய் சொல்லு.''

''ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க.''

''நான் நல்லா இருக்கேன் மீனு. நீ எப்படி இருக்க.''

''நல்லா இருக்கேன் அக்கா. ''

ஹரிணி மீனுவை விட மூன்று வயது பெரியவள்.

''அருண், ஒரு பிரச்சினை ஆயிடுச்சு. ஒரு ஆக்ஸிடெண்ட் '' 

''என்ன ஆக்சிடென்ட், யாருக்கு, என்ன ஆச்சு ''

''ஹரிணியோட வலது கால்ல ஒரு கார்காரன் ஏத்திட்டு போயிட்டான்.  ஒரு மாசம் முன்னாடி ''

கேசவன் ஹரிணியின் வலது காலை காட்டினான். முழங்கால் பகுதியில் இருந்து அவள் கால் இல்லை. 

அதிர்ச்சியாக இருந்தது.

''செக்கப் தான் போயிட்டு வர்ரோம்.  அந்தக் கால் மாதிரி அளவெடுத்து செஞ்சு ஹாஸ்பிடலியே கொடுப்பாங்களாம். கொஞ்சம் பணம் தேவைப்படுது. உன்கிட்ட இருந்தா கடனா தரமுடியுமா ?''

''கேசவா, இப்படிக் கேட்டுட்டியே. உன்கிட்ட எத்தனை முறை கடன் வாங்கி இருக்கேன். என்கிட்ட இருந்தா கொடுக்காம இருப்பேனா?''

நான் மீனுவைப் பார்த்தேன்.  மீனு என்னைப் பார்த்தாள்.

தன் ஸ்கர்ட் பாக்கெட்டில் இருந்து 2000 ரூபாயை கேசவனிடம் நீட்டினாள். 

''அங்கிள் இந்தக் காசை டாக்டர் கிட்ட கொடுத்து, ஹரிணி அக்கா கால் சரி பண்ண சொல்லுங்க அங்கிள்'' என்றாள். 

''தேங்க்ஸ் மீனு , தேங்க்ஸ் அருண்.  எவ்ளோ சீக்கிரம் முடியுமோ திருப்பி கொடுத்துடறேன்.''

''அப்புறம் பாத்துக்கலாம் கேசவா.  மெதுவா கொடு.''

அவர்கள் ஆட்டோ கிளம்பி சென்றது.

''மீனு, நீ ரொம்ப நல்ல பெண்ணாய் ஆயிட்டே... ''

''ஹரிணி அக்கா பாவம் பா...  அதான் கொடுத்தேன். உங்க கிட்ட 30 ரூபாய் இருக்குலே. அதுல மேஜிக் உண்டியல்  வாங்கி, டெய்லி காசு சேர்த்து ஜல் ஜல் கொலுசு வாங்கிக்கலாம்'' என்றாள். 

''ஓகே டா... செல்லம் ''

கடைவீதியில் மீண்டும் ஒரு மேஜிக் உண்டியல் வாங்கிகொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

எழுதியவர் : தமிழ்ச்செல்வன்

30 ஜூன், 2020

புதுமைப்பித்தன்

புகழ்பெற்ற சிறுகதை மன்னன் என்றழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்களின் நினைவுநாள் அவரைப்பற்றிய சில குறிப்புகள் 
தொடக்கக் கல்வியை செஞ்சி, கள்ளக்குறிச்சி, திண்டிவனத்தில் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். 

உலக இலக்கியங்களை தேடித் தேடி வாசித்தார். இவரது முதல் படைப்பான ‘குலாப்ஜாமூன் காதல்’ 1933-ல் வெளிவந்தது. இவரை பத்திரிகை உலகுக்கு அழைத்து வந்தவர் வ.ராமசாமி. 

சென்னையில் 1934-ல் குடியேறினார். ‘ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ‘மணிக்கொடி’ இதழில் இவரது படைப்புகள் பிரசுரமாகின. அதில் வெளியான இவரது முதல் சிறுகதை ‘ஆத்தங்கரைப் பிள்ளையார்.’

‘மணிக்கொடி’, ‘கலைமகள்’, ‘ஜோதி, ‘சுதந்திரச் சங்கு’, ‘ஊழியன்’, ‘தமிழ்மணி’ உள்ளிட்ட பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்தன. 

‘புதுமைப்பித்தனின் கதைகள்’ என்ற தொகுப்பு 1940-ல் வெளியானது. ‘கிராம ஊழியன்’, ‘சிவாஜி’ போன்ற சிற்றிதழ்களில்பணம் பெற்றுக் கொள்ளாமல் எழுதினார். 

‘தினமணி’, ‘தினசரி’ பத்திரிகைகளிலும் பணிபுரிந்தார்.
எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஈடுபட்டார். அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள் எழுதினார்.

சென்னை, தஞ்சாவூர் அல்லாத பிற வட்டார வழக்கு தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் இவர். இவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நெல்லைத் தமிழ் பேசின. மாக்சிம் கார்க்கி, எர்னஸ்ட் டோலர், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார்.

இவர் சிறந்த இலக்கிய விமர்சகரும்கூட. சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைபெயர்களில் எழுதினார். இலக்கியத்தின் பல துறைகளிலும் எழுதினாலும், சிறுகதைகள்தான் இவருக்கு தனியிடம் பெற்றுத் தந்தன. 

‘காஞ்சனை’, ‘நாசகாரக் கும்பல்’, ‘மனித யந்திரம்’, ‘பொன்ன கரம்’, ‘இது மிஷின் யுகம்’, ‘சாபவிமோசனம்’, ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ‘ஒருநாள் கழிந்தது’, ‘சிற்பியின் நரகம்’, ‘செல்லம் மாள்’ முதலான அற்புதமான படைப்புகள் சாகாவரம் பெற்றவை. 

திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, திரைப்படம் தயாரிக்க முயன்றார். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 

19 ஜூன், 2020

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து 
50ஆம் ஆண்டு நிறைவு
(1970-2020)

அரசு விழாக்களிலும், பொது விழாக்களிலும், இறை வணக்கப் பாடலாக 'கஜவதனா கருணாகரனா', 'வாதாபி கணபதே' போன்ற விநாயகர் பாடல்களே பாடப்பட்டது. சிலர் தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடினார்கள்.

1970 மார்ச் 8, சர்வதேச மகளிர் தினத்தன்று, சென்னையில் நடைபெற்ற திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில், "நீராருங் கடலுடுத்த' பாடலே இனிமேல் அரசு விழாக்களில் பாடவேண்டும்" என முதல்வர் கலைஞர் அறிவித்தார்.

கலைஞர் இதை அறிவித்தவுடன் 'கலைமகள்' மாத இதழின் ஆசிரியர் கி.வா.ஜெகநாதன் எதிர்ப்புத் தெரிவித்தார். கடவுளும், தமிழ்த்தாயும் ஒன்றல்ல என்றும், அதற்குப் பதிலாகத் தாயுமானவர் எழுதிய 'அங்கிங்கெனாதபடி' என்ற பாடலையே பாட வேண்டும் என்றார்.

பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை, ம.பொ.சி., டாக்டர் மு.வரதராசன் உள்ளிட்டோர் கலைஞரின் முடிவை வரவேற்றனர். எதிர்ப்புகள் அடங்கிப் போனது.

"தேசிய கீதம் இருக்கும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது சரியல்ல என்றும், இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது" என்று சமர்குஹா என்பவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

ஆனால், இது இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்று அன்றைய துணை உள்துறை அமைச்சர் கே.ஆர்.இராமசாமி பதிலளித்தார்.

1970 ஜூன் 17, அரசு உத்தரவாக வெளியிடப்பட்டது. 1970 நவம்பர் 23 முதல் அமல்படுத்தப்பட்டது.

'நீராருங் கடலுடுத்த
நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத்
திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க
இருந்த பெரும் தமிழணங்கே
தமிழணங்கே
உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

திருநெல்வேலி இந்துக் கல்லூரி முதல்வராக இருந்த சுந்தரம் பிள்ளையின் 'மணோன்மனீயம்' நாடகத்தில் இடம்பெற்ற பாடலே 'நீராருங் கடலுடுத்த' எனத் தொடங்கும் இந்தப் பாடல். எம்.எஸ்.விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டு, டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலாவால் பாடப்பட்டு, இசைத்தட்டுகள் வெளியிடப்பட்டன.

இந்தப் பாடல் 50 ஆண்டுகளாக தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாடலை எழுதிய மணோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களையும், அதைத் தமிழகமெங்கும் பாட வைத்த  கலைஞரையும் இந்நாளில் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.

தகவல் : மா.ஆவுடையப்பன்

5 மே, 2020

புத்தக வாசிப்பு

மாணவர்களின் புத்தக  வாசிப்புக்குப் புதுமுறையைக் கையாளலாமே!


புத்தக வாசிப்பில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுவது என்பது அவர்களின் வளமான எதிர்காலத்துக்கு அஸ்திவாரம் இடும்.

இவ்விஷயத்தில் கல்வித் துறையும் புதிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். பாடப் புத்தகத்தைத் தவிர ஏதாவது நல்ல புத்தகம் ஒன்றை, மாணவர்களின் வயது, வாசிக்கும் திறன், அவர்களை ஈர்க்கக்கூடிய துறை ஆகியவற்றுக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்து இரண்டு மாதங்களுக்கு ஒரு புத்தகம் என்று கொடுத்து வாசிக்கச் சொல்லலாம்.

 என்ன வாசித்தோம் என சிறு கட்டுரை எழுதித்தரச் சொல்லலாம். இதற்கு மதிப்பெண், தேர்வு என்றெல்லாம் அச்சமூட்டக் கூடாது.

முன்பெல்லாம் குடிமைப் பயிற்சி அல்லது நன்னெறி வகுப்பு என்று வாரத்துக்கு ஒன்று அமைத்ததைப் போல மாதத்துக்கு ஒன்றாகக்கூட நூல் வாசிப்புக்கு ஒதுக்கலாம்.

புத்தகத்தில் கவனிக்க வேண்டியவை குறித்தும், வாசிக்கும் விதத்தையும் பொதுவாகச் சொல்லித்தர வேண்டும். ஆறாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குச் சித்திரக் கதைகளுடன் உள்ள புத்தகங்களைத் தரலாம்.

முதலில் பாடப்புத்தகம் தவிர்த்து பிற புத்தகங்களும் உள்ளன என்ற அறிமுகமே மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கும். வாசித்துப் பழகி ருசி ஏற்பட்டுவிட்டால் பிறகு தன்னம்பிக்கை பிறக்கும். இதனால், தாங்களாகவே அடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள்.

பட்டிமன்றம், பேச்சுப்போட்டி என்று ஏதாவது ஒரு தலைப்பில் பேசச் சொல்வதைப் போல, ஒரு புத்தகத்தைப் பற்றி திறனாய்வு அல்லது குழு விவாதத்துக்கு ஏற்பாடுசெய்தால் நன்கு வாசித்த மாணவர்களின் பேச்சு, மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் தூண்டுதலாகவும் அமையும்.

ஆசிரியர்களுக்கே மாணவர்களின் கற்றல் திறனையும் விவாதிக்கும் திறனையும் இதர ஆற்றல்களையும் தொடக்கத்திலேயே அடையாளம் காணும் வாய்ப்பாக அமையும்.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் போன்ற பாடங்களுக்கான எளிய அறிமுக நூல்களைக்கூட இப்படிச் சுற்றுக்குவிட்டு படிக்கவைப்பதன் மூலம் அந்தந்தப் பாடங்களில் லயிப்பைக் கூட்டவும், சந்தேகங்களைத் தெளிந்துகொள்ளவும் வழிவகுக்கலாம்.

ஆசிரியர்களே உடனிருந்து வரிக்கு வரி சொல்லித்தந்து புரியவைக்கும் முறைக்குப் பதிலாக, தாங்களே படிக்கவும், சந்தேகம் வரும்போது ஆசிரியரிடம் கேட்டு மேற்கொண்டு தொடரவும் இந்தப் பயிற்சி உதவும். ஆசிரியர்கள் மட்டுமே தங்களுடைய பொறுப்பாகக் கருதாமல் வகுப்புத் தலைவன் போன்ற மாணவர் குழுவையும் இணைத்துக்கொண்டால் குழு இயக்கமாக மலரும்.

பாடப்புத்தக வாசிப்பைவிட பிற நூல்களை வாசிக்கும் மாணவர்களுக்குக் கற்பனைத்திறனும் தானாகவே வாக்கியங்களை அமைக்கும் லாகவமும் கூடிவிடும். கற்பித்தல் என்ற கடமை ஆசிரியர்களுக்கு எளிதாகிவிடும்.

வெறும் பாடப்புத்தகம் எனும்போது தோன்றும் கடமையுணர்ச்சி, அதைத் தாண்டிய படிப்பு எனும்போது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் நிரம்ப ஊட்டும். ஆசிரியர்கள் கண்காணிப்பில் அவர்களுடைய வழிகாட்டலில் நல்ல நூல்களைத் தாங்களாகப் படிக்கும் மாணவர்கள், நடந்து செல்லும் மாணவர்கள் மிதிவண்டியை ஓட்டப் பழகும்போது அடையும் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் அடைவார்கள்!

1 மே, 2020

அம்மணி அம்மாள்

அம்மணி அம்மாள் கோபுரம்


ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல.
அதுவும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது.

அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர் ஒரு சித்தப் புருஷர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு உயர் சித்த நிலைப் பெற்றவர். பொதுவாக ஒவ்வொரு சித்தருக்கும் குரு என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். குரு என்று வேறு யாரையும் தேடாமல் பிறவியிலேயே சிவன் மீது சித்தம் வைத்த அந்தப் பெண் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.

அந்தப் பெண்ணின் பெயர் அம்மணி அம்மாள். பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அவர் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம். அந்த ஆலயத்தில் வடக்குப் பகுதி கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது.
அதாவது கோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டு, பிறகு ஏனோ கட்டப்பட முடியாமல் அப்படியே மொட்டையாக நின்று போனது. எத்தனையோ பேர் முயன்றும் அந்த கோபுரத்தைக் கட்ட இயலவில்லை.

ஈசனுக்குத் தெரியும், எந்த வேலையை, யாரிடம் கொடுத்து, எப்படி முடிக்க வேண்டும் என்று. அதன்படி திருவண்ணாமலை ஆலய வடக்குக் கோபுரத்தைக் கட்ட அம்மணி அம்மாளை ஈசன் தேர்வு செய்து அருள் புரிந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள சென்னசமுத்திரத்தில் கோபால் பிள்ளை- ஆயி தம்பதிக்கு 1735-ம் ஆண்டு மார்கழி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அம்மணி அம்மாள் பிறந்தார். அவரது உண்மையான பெயர் அருள்மொழி.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சிறு வயதிலேயே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டது.
தங்கள் மகள் எப்போதும் அருணாசலேஸ்வரர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து பயந்து போன அவர் பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். சொந்த மாமன் மகனை மணமகனாகப் பேசி முடித்தனர்.

இதை அறிந்த அம்மணி அம்மாள், “நான் இதற்காக பிறவி எடுக்கவில்லை” என்று கூறி, வேதனைத் தாங்காமல் சுமார் 1 மைல் தொலைவில் உள்ள கோமுட்டி குளத்துக்குள் குதித்து விட்டார். ஊரே திரண்டு வந்து குளத்துக்குள் இறங்கித் தேடினார்கள். அம்மணி அம்மாளை காண முடியவில்லை. மூன்றாவது நாள் குளத்தில் இருந்து அம்மணி அம்மாள் வெளியில் வந்தார். ஊரே திரண்டு ஆச்சரியப்பட்டது.

குளக்கரை மண்ணை எடுத்து அவர் கொடுக்க, அது அவல் பொரியாக மாறியது. அம்மணி அம்மாள் சித்தப்புருஷராக மாறி இருப்பது அப்போதுதான் அவர் பெற்றோருக்கும், ஊருக்கும் தெரிய வந்தது. தினமும் அண்ணாமலையாருக்கு தொண்டு செய்வதும், கிரிவலம் செல்வதுமாக இருந்த அவருக்கு ஒருநாள், “வடக்குக் கோபுரத்தை கட்டும் பணியைத் தொடங்கு” என்று ஈசன் உத்தரவிட்டார். அம்மணி அம்மாள் சித்தர் சக்தி பெற்றிருந்தாலும் முதலில் அவருக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது.

அம்மணி அம்மாளின் ஆற்றலை அறிந்து வியந்த வணிகர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். இப்படி சேர்ந்த பணத்தைக் கொண்டு கோபுரம் கட்டும் வேலையை அவர் மேற்கொண்டார். கோபுரம் ஒவ்வொரு நிலையாக கட்டி முடிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்து நிலைகள் வரை கட்டி முடிக்கப்பட்டபோது, அம்மணி அம்மாளுக்கு மீண்டும் பணம் தேவைப்பட்டது.

பொது மக்களிடமும், வணிகர்களிடமும் திரும்ப, திரும்ப எத்தனைத் தடவைதான் பண உதவியும், பொருள் உதவியும் கேட்க முடியும்? எனவே மைசூர் மகாராஜாவிடம் போய் பொன் பொருள் உதவிகள் கேட்க அவர் தீர்மானித்தார். மறுநாளே மைசூருக்கு பயணமானார். அரண்மனையை அடைந்தபோது வாசலில் நின்ற வாயிற்காப்பாளன் அவரை உள்ளே விட மறுத்தான்.

அம்மணி அம்மாளின் எளிமையானக் கோலத்தைப் பார்த்து சந்தேகம் அடைந்த வாயிற்காப்பாளன் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்தான். காலையில் வந்தவர் மதியம் வரை அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை உள்ளே தர்பார் மண்டபத்தில் ஒரு சுவாரசியம் நடந்து கொண்டிருந்தது. லகிமா ஆற்றலால் உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று வந்து விடும் சக்தியைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். பொதுவாக சித்தர்களுக்கு ஒரே நேரத்தில் 2 அல்லது 3 இடங்களில் தோன்றும் ஆற்றல் உண்டு.

இந்த ஆற்றலைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை வாசலில் வாயில் காப்பாளனால் தடுக்கப்பட்ட இடத்திலும் அம்மணி அம்மாள் இருந்தார். உரிய அனுமதியின்றி ஒரு பெண் தன் அருகே வந்து நிற்பதைக் கண்டதும் மகாராஜா மிகவும் ஆச்சரியமடைந்தார். “நீ யார்? எப்படி உள்ளே வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

அம்மணி அம்மாள் தன்னைப் பற்றியும், திருவண்ணாமலை ஆலயத்தில் கோபுரம் கட்டி வரும் தகவலையும் சொல்லி, அந்த கோபுரப் பணியை நிறைவு செய்ய பொன்னும், பொருளும் கேட்க வந்திருப்பதாக கூறினார். மேலும் வாயிற்காப்பாளன் தன்னை உள்ளே விட மறுத்ததால், ஒரே நேரத்தில் 2 இடங்களில் தோன்றும் சித்தாடல் மூலம் உள்ளே வந்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் மைசூர் மகாராஜா நம்ப முடியாமல் பார்த்தார்.

பிறகு வாயிற்காவலனை வரச் சொல்லி உத்தரவிட்டார். மகாராஜா இருக்கும் அவைக்குள் வந்த வாயிற் காவலன், சற்று அதிர்ச்சியுடன் அம்மணி அம்மாளைப் பார்த்து, “உங்களை நான் உள்ளே விடவில்லையே. வெளியில்தானே அமர்ந்திருந்தீர்கள். உள்ளே எப்படி வந்தீர்கள்?” என்றான். உடனே மகாராஜா, நீண்ட நேரமாக அந்த அம்மாளுடன் தான் பேசிக் கொண்டிருப்பதாக கூறி விட்டு, வாயிற் காவலனுடன் விறுவிறுவென வாசல் பகுதிக்கு வந்தார்.

அங்கும் ஒரு ஓரமாக அம்மணி அம்மாள் அமர்ந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, சபைக்குள்இருந்த அம்மணி அம்மாள் மாயமாய் மறைந்திருந்தார். உடனே வந்திருப்பவர் சாதாரண பெண் அல்ல என்பதை மகாராஜா புரிந்து கொண்டார். அம்மணி அம்மாள் வடிவில் அண்ணாமலையாரே வந்து விட்டதாக கருதினார். நன்கு உபசரித்தார். பட்டுச்சேலை ஒன்று பரிசளித்தார். பிறகு தனது பட்டத்து யானை மற்றும் குதிரைகள், ஓட்டகங்களில் நிறைய பொன்னும், பொருளும் ஏற்றி கோபுரத்தைக் கட்டி முடிக்குமாறு அம்மணி அம்மாளை மகாராஜா அனுப்பி வைத்தார்.

மைசூர் மகாராஜா கொடுத்த பொன், பொருட்களைக் கொண்டு கோபுரத்தின் 6-வது மற்றும் 7-வது நிலைகளை எளிதாகக் கட்டி முடித்தார். இன்னும் 4 நிலைகள் கட்ட வேண்டும். பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்தார். அண்ணாமலையாரே வழி காட்டுங்கள் என்று ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டார். அப்போது அண்ணாமலையார், அவர் கனவில் தோன்றி, “கோபுர வேலையைத் தொடங்கு. தினமும் வேலை முடிந்ததும் பணியாளர்களுக்கு விபூதியை அள்ளிக் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

அதன்படியே கோபுர வேலை நடந்தது. தினமும் மாலை பணியாட்களுக்கு சம்பளத்துக்கு பதில், அம்மணி அம்மாள் திருநீறை அள்ளிக் கொடுக்க, அது அவரவர் செய்த வேலைக்கு ஏற்ற கூலியாக மாறியது. இப்படி கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. இதன் மூலம் மனதில் துணிச்சலும், இறை அருளும் இருந்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதை அம்மணி அம்மாள் தெளிவுபடுத்தினார். அவரது விடாமுயற்சியைக் கண்டு ஆங்கிலேயர்களும் வியந்து நின்றனர்.

171 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட அந்த கோபுரம், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அம்மணி அம்மன் கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே மாதிரி தலா 13 கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தெற்கில் உள்ள திருமஞ்சன கோபுரமும் (157 அடி) மேற்கில் உள்ள பே கோபுரமும் (144 அடி) வடக்கு கோபுரத்தை விட உயரம் குறைந்ததாகும்.

திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரத்துக்கு அடுத்தப்படியாக பெரிய கோபுரத்தைக் கட்டி சாதனை படைத்ததால் அந்த கோபுரத்தை எல்லோரும் “அம்மணி அம்மன் கோபுரம்” என்று அழைக்க நாளடைவில் அது நிலைத்துப் போனது. இந்தக் கோபுரம் கட்டி முடித்ததும், கோபுரத்துக்கும், ஆலயத்துக்கும் அம்மணி அம்மாள் தாமே முன்நின்று கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

பிறகு துறவி போல வாழ்ந்த அவர் பல்லாயிரக்கணக்கான வர்களுக்கு திருநீறு கொடுத்து நோய் தீர்த்தார்.  திருநீறு மூலம் அற்புதங்கள் செய்து புகழ் பெற்ற அம்மணி அம்மாள் தன் 50-வது வயதில் 1875-ம் ஆண்டு தைப்பூசம் தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8-வது லிங்கமான ஈசான்ய லிங்கம் எதிரில் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வழங்கப்படும் விபூதிப் பிரசாதம் மிகவும் புகழ் பெற்றது. மனக் கவலைகளை விரட்டும் மகத்துவம் அந்த ஜீவ சமாதி திருநீறுக்கு உண்டு.

அம்மணி அம்மாள் ஈசனோடு கலந்து சுமார் 150 ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு அருவமாக வந்து தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறார். குறிப்பாக கிரிவலம் வரும் பக்தர் களிடம் அவர் பேசுவதாக, அறிவுரைகள் சொல்வதாக நம்பப்படுகிறது. அவர் ஜீவ சமாதியில் சிறிது நேரம் தியானம் செய்தாலே மனம் லேசாவதை உணரலாம்.

ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

கட்டுரை தந்துதவியவர்
குரு மனோகர வேல்

29 ஏப்ரல், 2020

ஓர் இரவு

சிறுகதை

 ஓர் இரவு


*மம்சை செல்வக்குமார்

பழைய நினைவுகள் துளிர்க்க
அந்தப் படபடப்பில் வியர்க்க
தூக்கம் போய் விளிப்பு வந்தது.

ஊரெங்கும் மழை
உள்ளூரில் வெயில்
உள்ளறைவரை அனல்
பிசுபிசுத்தது உடல்.

"அப்பாவுக்கு என்னாச்சுமா
அடிக்க வர்றார்
இப்படி அவர் இருந்ததில்லையே?"

"நீ அவர்கிட்ட போகாதே"
என்னைச் சமாதானம் செய்ய
இப்படியொரு வார்த்தை
அவள் சொல்லியிருக்கக் கூடாது.

பிள்ளைகள் அம்மாவிடவும்
அப்பாவிடவும் அண்டாம இருக்க முடியுமா...

இப்பவே என்னைப் பிரித்துப் பார்த்தால் என் எதிர்காலம்...
என் மகனின் எதிர்காலம்...

"ஒருவர் முகத்தை
ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தால் போரடிக்குதுமா..."
மகன்தான் ஆரம்பித்தான்.

"அப்படின்னா, அய்யாமையையோ
அம்மாச்சியையோ கூப்பிட்டுக்க வேண்டியதுதான்" நான் ஆறுதலுக்காகச் சொன்னேன்.

"அப்போ எங்க அப்பாவ என்ன செய்ய...?" 
மனைவியின் கேள்வி என்னை
வேறு யோசனைக்குக் கொண்டு போனது.

"நாம இருக்கிற நிலைமையில்
யாரையாவது கூட வச்சிக்க முடியுமா..."
என் பொருளாதார நிலை விளித்துக் கொண்டது.

"என்ன செய்வது...
அப்ப இப்படியே இருக்க வேண்டியதுதான்..."
எழுந்து சமையல் கட்டுக்குள் போனாள் மனைவி.

"அப்ப அவரையும் கூப்பிடுவோம்"
அப்பப்ப கடைத்தீனி வாங்கித் தருவார்ல என்பதுபோல்
இருந்தது மகனின் பார்வை.

"அய்யாமை ஒத்தையில இருக்காங்க அவங்கமேல இரக்கம் வரலையா உனக்கு..." வார்த்தை நாக்கு வரை வந்தது, விழுங்கிக் கொண்டேன்.

சிறிது நேரம் ஏதும் பேசாம
அவரவர் வேலையில் இருந்தோம்.

"ஏம்பா இப்படிச் செய்தால் என்ன..."
மகன்தான் மறுபடியும்.

"அவங்க வரவேண்டாம்,
நாம அங்க போனால் என்ன..."
சொல்லி விட்டு ஓரக்கண்ணால் என்னை ஏறிட்டான்.

"போகலாம். ஆனால் இரண்டு மூனு நாள்ல நாம திரும்பனுமே...
அப்பா வேலைக்குப் போகனுமே..."
மனைவியின் திட்டம் புரிந்தது.

"எங்கே போனாலும் குடும்பமாய்ப் போனால் நல்லது. அதென்ன நீங்கமட்டும் தனியே போவது."

"ஆமா... நீங்க வந்திர கிந்திர போறீங்க..." மனைவியின் குத்தல் வலித்தது.

"ஆமப்பா... எப்பப் பாரு வேல வேலன்னுக்கிட்டு. என்னைக்காவது நாம சேர்ந்து ஊருக்குப் போயிருக்கோமா?"
இவனும் அடிபோடுறானே...
எண்ணம் எழுந்து கொண்டது.

"இந்தப் பேச்சை இத்தோடு விடுவோம். டேய்... நாளைக்கு உனக்கு ஸ்கூல் இருக்லே... போய் படு" என்றதும், என்னை முறைத்து விட்டுப் போனான்.

எல்லா வேலையும் முடித்து,
அவரவர் படுக்கைக்குப் போய் விழுந்தாச்சு.

மகனும் மனைவியும் உள்ளறையில் முனுமுனுக்கும் சத்தம்.

"என்ன அங்கே சத்தம்?"

"ஒன்னும் இல்லே..."
மனைவியின் குரல்.

"இப்படி வீட்டுக்குள்ளே இருப்பது போரடிக்குது அப்பா..."

"விடிந்ததும் ஸ்கூலுக்குப் போற,
முடிந்ததும் வீட்டுக்கு வர்ற...
இதுல உங்களுக்குப் போரடிக்குதோ..."

"ஸ்கூல்தான் முடிய போகுதே..."
மனைவிதான் மீண்டும் தூண்டுறா...
என்னை என்னுள் நோன்டுறா...

'ஆமா... முழுப் பரீட்சை முடிய போகுது. அதுக்குத்தான் இந்த அட்சாரம்...'
எண்ணவோட்டத்தை நிறுத்திவிட்டுச் சொன்னேன்,

"வருஷவருஷம் இரண்டு மாதம் என்னை அம்போன்னுவிட்டுப் போறீகளே, என் கஷ்டம் உங்களுக்குப் புரியாதா...
தனியாய் இருந்து, சமைத்து சாப்பிட்டு வேலைக்குப் போறதும், துணிமணிகளைத் துவைக்கிறதும் எவ்வளவு கஷ்டம் தெரியுமா..."

"அப்படித்தானே இருந்தீங்க..."

"அப்போ தனியாய் இருந்தேன்,
இப்ப கல்யாணமாகி ஒரு குடும்பமாய் இருக்கேன்ல..."

"அப்பா நீங்களும் லீவு போட்டு எங்கக் கூட வரலாமிலே..."

"எங்க வர்றது. வீட்டு வாடகை, மாதச் சாப்பாட்டுக்கு, அடுத்த வருஷ உன் ஸ்கூல் பீஸ்ஸுக்குப் பணம் யார் கொடுப்பா..." கொஞ்சம் கடுப்பாகிப் போனேன்.

"வருஷத்துக்கு ஒருக்கா ஊருக்குப் போவது உங்களுக்குப் பொறுக்காதே..."

"வருஷத்துக்கு ஒருக்காவா... புரட்டாசி மாதத் திருவிழாவுக்கு இரண்டு வாரம். ஐப்பசி மாத தீபாவளிக்கு ஒரு வாரம். அப்புறம் நல்லது கெட்டதுக்குன்னு போனதில்லே..." லேசாய்க் குரலை உயர்த்தினேன். அப்பவாவது அடங்கும் என நினைத்தேன்.

"ஆமா... போனது வந்ததுக்கெல்லாம் கணக்கு பாருங்க..." விசும்பல் சத்தம் உள்ளிருந்து வந்தது.

அவா போறதுன்னு முடிவு பன்னிட்டால், போகுறவரைக்கும் விடமாட்டாள். மகனைக் கொம்பு வீசிகிட்டே இருப்பாள்.

"சரி போறதுதான் போறீங்க, அப்படியே நம்ம ஊருக்கும் போய், எங்க அம்மா கூட ஒரு பத்து நாள் இருங்க."

"நீங்களும் கூட வர்றதா இருந்தால் அங்கே போவோம்."

"அங்கே போனா ஒரே போர்..."

"ஏலேய்... நீ இன்னும் தூங்கலையா... இந்தா வாரேன்.
அது நம்ம சொந்த ஊர்லேய். நம்ம மண்ணு. உங்க மூதாதையர் வாழ்ந்த பூமி. நாம எங்குட்டுத் திரிஞ்சாலும் நம்மள அரவணைக்கிற உறவுகள் எல்லாம் அங்கதாம்லேய் இருக்காங்க. அதுமட்டுமல்ல, உங்க அய்யாமை, என்னைய பெத்த அம்மா அங்கே தனியாய் இருக்குலேய்... உம்மேல அம்முட்டு பிரியமாய் இருப்பாங்கலேய்..."

"போங்கப்பா அது ஒரு ஊர்... அங்க யாரு போவா, இல்லமா..."

"ஆமா அந்த ஊரை அவர்தான் மெச்சுக்கனும்..." சுதியை ஏற்றினாள்.

விளம் வந்தவனாய் அவனை மிரட்ட கையை ஓங்கினேன்.

"இவரு ஒருத்தரு அடிக்க வர்றாரு. சும்மா இரும். இப்ப என்னத்த சொன்னான். அவன் சொன்னது நெசம் தானே. அங்கே ஆறு இருக்கா. உங்க அம்மா ஒருத்தகதான் இருக்காக... வேற யாரு இருக்கா கூடமாட ஓத்தாசைக்கு. போரும், போய்ப் படும். நீவேற எதுக்குல அவர்கிட்ட வாய்க் கொடுக்கே" அவனைச் செல்லமாய் ஒரு சாத்து சாத்தி, என்னை முறைத்தாள்.

சர்வமும் இத்துப் போன தேக்கு மரமாய் நான் ஆடிப்போனேன்.

அங்கே... அந்த ஊர்ல... நான் பிறந்த மண்ணுல... எங்க அம்மா மட்டுமா இருக்காக... அவுக பிறந்து வளர்ந்த வரலாறு இருக்கு... நான் தவிழ்ந்து திரிந்தோடிய வீதியிருக்கு... நான் படித்த பள்ளியிருக்கு... பள்ளிக்கால அடையாளம் இருக்கு, அதற்கொரு வரலாறு இருக்கு... என் இதயம் முழுக்கப் பரவி கிடக்கும் என் எண்ணம் யாவும் அங்கே சிதறிக் கிடக்கு... இவையெல்லாம் போக்கக் கூடியதா, போகக் கூடியதா... நினைவிழந்தவன் போல் கண்ணயர்ந்தேன், மனசு விளித்துக் கொண்டது.

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...